AdsforIndians

உஷார்! உங்களுக்கும் இது ஒரு பாடம்!

Tuesday, April 6, 2010

சென்னையின் புறநகர்ப் பகுதியிலிருக்கும் பிரம்மாண்டமான மருத்துவக்கல்லூரி மருத்துவமனை..
இலவச மருத்துவ சிகிச்சைப் பகுதியில், இரண்டாம் தளத்திலிருந்த பெண்கள் வார்டின் கடைசி வரிசையில் முதல் கட்டில்.. கட்டில் சைஸுக்குக் கொஞ்சமும் பொருத்தமில்லாமல், சிறிய மைனாக்குஞ்சு போல உட்கார்ந்திருந்தார் அந்த அம்மையார். வயது 86.

''
மணி என்ன இப்போ? ஆறே முக்கால் ஆச்சா? அப்ப, இன்னும் கொஞ்ச நேரத்துல சாப்பாடு கொண்டுவந்துடுவான்..!'' என்று மூன்றாவது தடவையாக சொல்லிவிட்டு, அந்த வார்டின் வாசல்புறம் பார்த்துவிட்டு நம்மைப் பார்த்துச் சிரித்தார். ஆங்காங்கே சில பற்கள் விழுந்திருக்க, குழந்தையின் சிரிப்புப் போன்றிருந்தது அது.

புன்னகைக்கத் தோன்றாமல், வயிற்றைப் பிசைந்தது நமக்கு!மூப்பு காரணமாகக் குறுகியிருந்த உடலைவிடப் பெரிய சைஸிலான நைட்டி.. கால்களுக்குக் கீழே விழுகிறது என்பதால் இடுப்பில் கொஞ்சம் சுருட்டி, ஒரு நாடாவை வைத்துக் கட்டி விடப் பட்டிருந்தது. கண்ணாடிக்குப் பின் கருவிழிகள் கூர்மையாக போவோர் வருவோரை அலசியபடியிருக்க, வாய் அவர்களைப் பற்றியோ, அந்த வார்டு, அதன் தலைமை மருத்துவர், டியூட்டி நர்ஸ்கள், சக படுக்கை நோயாளிகள் பற்றிய ஏதாவது ஒரு தகவலை உதிர்த்தபடி இருந்தது.
கட்டில் அருகிலேயே வாக்கர்! அதில் காயும் ஒரு நைட்டி, ஒரு துண்டு. அவரருகே ஒரு டைரி, ஒரு பேனா.. ஒரு மொபைல். இடதுபுறமிருந்த வெள்ளை நிற குட்டி அலமாரியில் சில பிஸ்கெட் பாக்கெட்டுகள், இரண்டு ஆப்பிள், ஒரு தட்டு, இரண்டு டம்ளர்.. தண்ணீர் (கூல்ட்ரிங்க் வந்த) பாட்டில்கள்..
இந்த அம்மையார், ஒரு காலத்தில் இலக்கிய உலகின் முடிசூடா ராணியாக விளங்கியவர் என்பதை உங்களால் நம்ப முடிகிறதா?கணவருக்கு மிக உயர்ந்த அரசுப் பணி. கை நிறைய சம்பளம். இந்த அம்மையார் எழுதிக் குவித்ததும் அதன் மூலம் அவர் பெற்ற விருதுகளும் ஏராளம்.. ஏராளம்! இன்று பல்கலைக் கழகங் களில்கூட அவருடைய எழுத்துக்கள் பாடமாக இருக்கின்றன. சென்னையில் சொந்தவீடு, வங்கியில் கணிசமான இருப்பு, நகைகள், வீடு கொள்ளா விருதுகள் என ராணி போல வளைய வந்தவர்தான்.. ஆனால், உறவினர்கள் மேல் வைத்த அதீத நம்பிக்கையும், வளர்ப்பு மகன் மேல் கொண்ட அளவற்ற பாசமும் அவரை இப்படி ஒரு பரிதாப நிலைமைக்கு ஆளாக்கிவிட்டது.
நாம் அவரை 'அம்மா' என்றே அழைப்போம். அம்மாவுக்கு பூர்விகம் தஞ்சாவூர்ப் பக்கம். ஆனால், திருமணத்துக்குப் பிறகு, கணவருக்கு அடிக்கடி மாற்றல் வரும் உத்தியோகம். புதிய இடம், புதிய சூழல், புதிய மனிதர்கள் என்றால் அம்மாவுக்கு அல்வா சாப்பிடுவது போல! அந்த சூழலையும் அந்த மனிதர்களையும் தனது அடுத்த கதையிலோ, நாவலிலோ பதிவு செய்துவிடுவார். இப்படி, மனைவிக்கு பிடிக்கும் என்பதாலேயே யாருமே போக விரும்பாத மலைப்பிரதேசங்கள், கிராமங்களுக்கு ட்ரான்ஸ்ஃபர் என்றாலும்கூட கண்ணை மூடிக்கொண்டு கையெழுத்துப் போட்டுவிடுவார் கணவர். அப்படி ஒரு காதல் வழியும் தம்பதி!
அவர்களுக்கு ஒரே குறைதான்! திருமணமாகி ஆண்டுகள் பல ஆகியும், அவர்களுக்குக் குழந்தை பாக்கியம் இல்லை. முற்போக்குக் கருத்துக்களும் பெண்ணுரிமைவாதியுமான அம்மா, அதை ஒரு சாதாரணமான விஷயமாக எடுத்துக் கொண்டார். அதிகம் கவலைப்படவோ, கோயில், பிரார்த்தனை என்று போகவோ செய்யவில்லை. யதார்த்தத்தை அது வரும் போக்கிலேயே எடுத்துக்கொண்டு வாழ்ந்தனர்.
அம்மாவுக்கு சகோதர, சகோதரிகள் அதிகம். அவர்களின் குழந்தைகளுக்குப் பிரியமான அத்தையாக, சித்தியாக இருந்தார். தனக்குப் பிள்ளை இல்லாத குறை தீர, உடன்பிறந்தவர்களின் குழந்தை களைக் கொஞ்சி மகிழ்ந்தார். அதில் ஒரு குழந்தை இவரிடம் அதிகமான ஒட்டுதலுடன் வளர்ந்தது. இவர்கள் வீட்டிலேயே, வளர்ந்து பெரியவனாகி, வேலைக்கும் போனார் அந்த வளர்ப்பு மகன். தன்னுடைய பாசம் முழுவதையும் அந்த மகன் மீது கொட்டி வளர்த்தார் அம்மா.
ஆனால், அத்தனை பாசமும் மிகப்பெரிய கேள்விக் குறியாக நின்றது, எட்டு வருடங்களுக்கு முன்பு அவருடைய கணவர் இறந்தபோது!
அம்மாவின் கணவர் இறந்தபோது, வந்த ஜனக்கூட்டம் போனபோது வீடு 'வெறிச்' என்றானது. உறவினர்களும் போனபிறகுதான், அம்மாவுக்கு 'தான் தனிமரமாக' நிற்பது உறைத்தது. என்ன எழுதி என்ன பயன்? அவருடைய தனிமையைப் போக்க எதுவுமே உதவவில்லை. 'சொந்தங்கள்தான் இருக்கிறதே!' என்று அண்ணன், தம்பி, அக்கா, தங்கை எல்லோருக்கும் போன் செய்தபோது.. அவர்கள் சொன்ன பதில் -

''
அவ்வளவு பெரிய வீட்ல நீ மட்டும் இருக்காத.. யாராவது வந்து, உன்னை ஏதாவது பண்ணிட்டு, இருக்கறதை கொள்ளையடிச்சிட்டுப் போயிடப் போறாங்க! வீட்டை வித்து, பேங்க்&ல போட்டுட்டு எங்க வீட்டுக்கு வந்துடு. நீ எங்க கூடவே இருந்துக்கலாம்!''
அப்புறம் நடந்ததெல்லாம் இவர் கைமீறிய விஷயங்கள்தான்!

மூன்று கிரவுண்டில் இருந்த அந்தப் பெரிய வீடு.. அம்மாவும் அவருடைய கணவரும் பார்த்துப் பார்த்துக் கட்டிய கனவு மாளிகை.. அம்மாவின் எழுத்துக்களுக்கு உயிர் தந்த அதன் மலர்த் தோட்டம்.. விலை பேசப்பட்டது.
வீட்டை விற்ற பணத்தை அக்கவுன்ட்டில் போட்டார்கள். வாங்கிய பார்ட்டிக்கு வீட்டை ஒப்படைக்கும் முன்பு, மாபெரும் கூட்டமாகத் திரண்டு வந்தனர் சொந்தங்கள். ''அத்தை.. இந்த வெள்ளிப்பிடி போட்ட வாக்கிங் ஸ்டிக் மாமாவோடதுதானே! நான் வச்சுக்கறேன்..'' என்று ஒரு மருமகள், ''பெரீம்மா.. இந்தத் தங்க முலாம் பூசின நடராஜர் சிலை, உனக்கு அந்த இலக்கிய விழால கொடுத்ததுதானே! இந்த மாதிரி ஒரு சிலையைத்தான் எங்க பூஜை ரூம்க்காக ரொம்ப நாளாத் தேடிண்டிருக்கார் இவர்!'' என்று ஒரு மகள்.. இப்படி ஆளாளுக்கு கைக்குக் கிடைத்ததை எடுத்துக் கொண்டு போக.. வேண்டாவெறுப்பாக அம்மாவைத் தன்னோடு அழைத்துச் சென்றார், வளர்ப்பு மகன். ஆனால், அந்த வளர்ப்பு மகனும் கடைசியில் அநாதரவாக விட்டதுதான் கொடுமை!
அப்படி, இப்படி என்று ஒவ்வொரு வீட்டிலுமாக அம்மாவைப் போட்டு இழுத்தடித்து, கடைசியாக மீண்டும் வளர்ப்பு மகன் வீட்டுக்கே வந்தபோது... அங்கே அழுது வீங்கிய கண்ணும் முகமுமாக வரவேற்ற மகனும் மருமகளும், ஒரு பெரிய 'சோகக் கதை'யை எடுத்து விட்டிருக்கிறார்கள். தங்களின் பிசினஸில் பயங்கர நஷ்டம் என்றும், கடன் தொகை 98 லட்சமாக உயர்ந்துவிட்டதென்றும், உடனே கட்டவில்லை என்றால், குடும்பத்தோடு கம்பி எண்ண வேண்டுமென்றும்.. கதாசிரியருக்கே கதை சொல்லியிருக் கிறார்கள்.
அப்பாவி அம்மாவுக்கு பாசம் கண்களை மறைத்தது. என்ன ஏதென்று கூடக் கேட்காமல், தன் பேங்க பாலன்ஸ், நகைகள் எல்லாவற்றையும் கொடுத்திருக்கிறார்.
அதன் பிறகுதான் கொடுமையான க்ளைமாக்ஸ்!

'
கடன்களை செட்டில் செய்துவிட்டாலும், பெருத்த அவமானம் ஏற்பட்டு விட்டதால் இந்த ஊரில் இனி இருக்க முடியாது' என்றும் 'தாங்கள் ஊரை விட்டே போகப் போவதால், தங்களால் இனி அம்மாவை வைத்துப் பராமரிக்க இயலாது' என்றும் அந்த வளர்ப்பு மகன் நீலிக்கண்ணீர் வடிக்க.. கரைந்து போனார் அம்மா!
அதுதான் சாக்கு என்று அவரை முதன் முதலாக முதியோர் இல்லத்தில் கொண்டு போய் விட்டிருக்கிறார்கள்.

''
கேக்காத.. அந்தக் கண்றாவிக் கதையெல்லாம் கேக்காத.. என் பணம், நகை போகட்டும்.. அதெல்லாம் யாருக்கு வேணும்? ஆனா.. நான் உயிரா நேசிச்ச என் புத்தகங்கள்.. அற்புதமான என் லைப்ரரி.. என் திறமைக்கு கிடைச்ச அவார்டுகள்.. மெடல்கள்.. எல்லாம் இப்போ எங்கே இருக்குன்னுகூட எனக்குத் தெரியாது.. எனக்கு சொத்துனு.. இதோ இந்தக் கட்டிலைச் சுத்தி இருக்கற சாமான்கள்தான்!'' என்று அவர் கதறியபோது.. காணச் சகிக்கவில்லை.
அப்போது நீலநிறச் சீருட அணிந்த பணியாள் ஒருவர் வந்து நர்ஸிடம் ஏதோ பேசிவிட்டுச் செல்ல..

''
அதோ அவர்தான் சாப்பாடு கொண்டுவர்றவர்.. எல்லாருக்கும் ரெண்டு சப்பாத்தி.. சாதம்! எனக்கு மட்டும் மூணு சப்பாத்தி, கூட்டு! கூட்டு கொஞ்சமாத்தான் கொடுப்பா.. நான் சாயந்தரம் தர்ற பாலை வாங்கி, குடிக்காம வச்சிருப்பேன்.. அதை சப்பாத்தில் ஊத்தி சாப்பிட்ருவேன்!'' என்றார்.
'
கடவுளே...!''
அந்தி சாய்ந்துவிட்டது. மிகப் பெரிய அந்த வளாகத்தின் மரத்து பறவைகள் ஏகப்பட்ட இரைச்சலுடன் கூட்டில் அடையத் தொடங்கியிருந்தன.

நீலச் சீருடை ஆளையே பார்த்தபடி பேசினார் அம்மா..
''
என்னை ஓல்ட் ஏஜ் ஹோம்ல விட்டதுக்கு, ஏதாவது நரகத்துல விட்டிருக்கலாம்.. கொடுமைம்மா அது! எல்லாரையும் டாய்லெட் கூட்டிட்டுப் போய் வர்றதுக்கு சங்கடப்பட்டு, மூத்திர ட்யூப் மாட்டிவிட்ருவாங்க.. எழுந்து நடக்கறப்ப, அதைத் தூக்கிண்டே நடக்கணும்.. இப்படி அங்கே நிறைய அக்கிரமங்கள்! எப்படியோ ரெண்டு வருஷம் ஓட்டினேன்.. முதல்ல வந்து பார்த்த சொந்தங்கள், அப்புறம் போன் விசாரிப்போட நிறுத்தினாங்க. அதுக்கப்புறம், அவங்க கூப்பிட்டப்போ, நான் பேசறதை நிறுத்திட்டேன். என் கணவரின் பென்ஷனையும் ஏதோ பண்ணிட்டாங்க.. எனக்கு வர்றதில்ல. என்னம்மா சொந்தம் பந்தம் எல்லாம்!'' & விரக்தியின் உச்சத்தில் கண்ணீர்கூட காய்ந்து விட்டது.

''
நல்ல நடை உடையாப் போன நான், அங்கே வழுக்கி விழுந்ததில நடக்க முடியாம, வாக்கர் வச்சு நடக்கற நிலைமைக்கு ஆளாயிட்டேன்! என்னால இனிமே அங்கே இருக்கவே முடியாதுன்றபோது, எனக்கு உன்னை மாதிரி பத்திரிகை உலகத்துல இருக்கற நண்பர்களும் சிலருமா சேர்ந்து என்னை இங்கே கொண்டு வந்து சேர்த்தாங்க... வந்து நாலு மாசமாகுது..
ஆனா அம்மா.. இந்த ஹாஸ்பிடல்ல சும்மா சொல்லக் கூடாதும்மா.. ஃப்ரீ வார்டுன்னாலும் கவனிப்புக்கு எந்தக் குறையுமில்ல. தினமும் மதிய சாப்பாடு, சீஃப் டாக்டர் வீட்டிலருந்து வருது.. டாக்டருக்கு சாப்பாடு கொடுத்தனுப்பும்போது, எனக்கும் கொஞ்சம் சாதம், காய்கறிகள், கீரை, பழங்கள்னு கொடுத்தனுப்புறாங்க.. நான் தத்தெடுத்த புள்ளை என்னைத் துரத்திவிட்டுட்டான்.. ஆனா, இப்போ என்னைத் தத்தெடுத்துக்கிட்ட டாக்டரின் கருணையால நான் உயிரோட இருக்கேன்!'' என்றவர், ''ஸ்,.. அப்பா..'' என்று வலியில் முனகியபடி, திரும்பி அமர்ந்தார்.

''
இடுப்பும், முதுகும் வலி கொல்லுதும்மா.. நேத்து நைட் முழுதும் தூங்க முடியாம புரண்டு படுக்க முடியாம மரண அவஸ்தைப்பட்டேன்.. இன்னிக்கு ராப்பொழுது எப்படிப் போகப் போகுதோ.. தெரியலியே! ராத்திரி வந்தாவே பயமா இருக்கும்மா! யம்மாடி.. பசிக்குது.. இன்னும் சாப்பாடு வரலியே!'' என்றவர், ''அந்தப் பையில் பிஸ்கட் இருக்கு.. எடுத்துத் தர்றியாம்மா?'' என்றார்.
நாம், ''ஆப்பிள் நறுக்கித் தரட்டுமா?'' என்றதும், ''கத்தியெல்லாம் கிடையாதும்மா'' என்றார்.
பக்கத்து 'பெட்'காரரிடம் கேட்டு கத்தி வாங்கி, ஆப்பிளைக் கழுவிவிட்டு, நறுக்கித் தர.. வேகம் வேகமாக எடுத்துச் சாப்பிட்டார். பாவமாக இருந்தது!
எத்தனை நாடுகளைப் பார்த்தவர்.. எத்தனை உயர்மட்ட விருந்துகளில் கலந்துகொண்டவர்.. எத்தனை நட்சத்திர ஹோட்டல்களில் இவருக்குப் பாராட்டு விழா நடந்திருக் கும்.. இவரது கணவருடன் எங்கெல்லாம் போய் உணவு அருந்தியிருப்பார்.. வீட்டில் எப்படி எல்லாம் விதம்விதமாக சமைத்து சாப்பிட்டிருப்பார்..!'
ஒரு நிமிஷம் நாம் உணர்வுகளில் கரைய, கண்களை நீர் மறைத்தது.

தூரத்தில் உணவு வண்டி தெரிந்ததும் அனைத்து நோயாளிகளின் அட்டெண்டர்களும் சுறுசுறுப்பாகத் தயாரானார்கள், க்யூவில் நிற்க!
''
தட்டைக் கொடுங்கம்மா.. நான் வாங்கிட்டு வரேன்..'' என்றதும், ''ஊஹூம்.. உன்னை அவருக்குத் தெரியாது.. புது ஆளுனு ரெண்டு சப்பாத்தி போட்ருவார்.. எப்போதும் வாங்கற ஆயா வாங்கினாதான் மூணு சப்பாத்தியும் நிறையக் கூட்டும் போடுவார்!'' என்று பரிதவித்தார்!
அய்யோ.. கொடுமையே!
ஆயா கொண்டுவந்த தட்டில் சூடான சப்பாத்திகளைப் பார்த்ததும், பஞ்சடைந்திருந்த அந்தக் கண்களில் அப்படி ஒரு ஒளி! ஏதோ ஒரு வாரம் சாப்பிடாதவர் போல அவ்வளவு வேகமாக பிய்த்து வாயில் போட்டார். நாம் பாட்டிலில் இருந்து டம்ளரில் தண்ணீர் ஊற்றி வைத்துவிட்டுக் காத்திருந்தோம்.

''
எனக்கு சுகர் இருக்கே! அதனால சர்க்கரை தொட்டுக்கக் கூடாது!'' என்றவர் சாப்பிட்டு முடிக்க, தட்டை எடுத்துச் சென்று கழுவி வந்தோம்.
''
இது யாரு பாட்டி.. உங்க பேத்தியா?'' - பக்கத்து பெட்டில் இருந்த அம்மா விசாரிக்க..

''
எங்க பத்திரிகைக் குடும்பத்தைச் சேர்ந்தவங்க..'' என்று சந்தோஷமாக அறிமுகப்படுத்தினார்.
அந்த அம்மா நம்மைப் பார்த்து, ''பாவம்மா இந்தப் பாட்டி.. ஏதாவது எழுதுவாங்க.. படிப்பாங்க.. சீஃப் டாக்டர்கிட்டே போய்ப் பேசிட்டு வருவாங்க.. மத்தபடி இவங்களைப் பார்க்க எப்பவாவது வர்ற ஒருத்தரைத் தவிர யாருமே வர்றதில்லம்மா!'' என்றார்.

''
ஆமாம்மா.. இங்கே பாத்தியா.. எல்லா 'பெட்'டுக்கும் அட்டெண்டர் உண்டு.. எனக்கு மட்டும்தான் யாரும் கிடையாது. அதேமாதிரி இங்கே யாருக்காவது என்னை மாதிரி முழுசா நரைச்சிருக்கா பாரு.. எல்லாம் சின்னப் பொண்ணுங்க.. அதுக்குள்ள ஏதேதோ வியாதி வந்து அட்மிட் ஆகியிருக்காங்க.. நான் ஒருத்திதான் இவ்வளவு வயசாகி, முதுமையினால இங்க வந்திருக்கேன்!'' என்று சர்வசாதாரணமாகச் சொன்னபடி மீதமிருந்த பாலை வாயில் ஊற்றிக் கொள்கிறார் அம்மா.

''
எனக்கு யார் யாரோ உதவ வர்றதா சொல்றாங்கம்மா..என் தன்மானம் அதையெல்லாம் ஏத்துக்கறதுக்கு இடம் கொடுக்கலம்மா.. நான் அப்படி ஒரு வாழ்க்கை வாழலியே! இந்த நிலமையில அது தப்பு இல்லேன்னாலும் என் மனசு சம்மதிக்கலயே..'' என்று தன்னிலை விளக்கம் கொடுக்கும் அம்மா, கீழே விழுந்ததில் எழுத வராமல் இருந்த தன் விரல்களுக்கு, இரண்டு குயர் பேப்பர் வாங்கித் தரச்சொல்லி எழுதி எழுதிப் பயிற்சி கொடுத்து, இப்போது ஒருவிதமாக, புரியும் அளவுக்கு எழுதுகிறார்.
டயரி முழுவதும் கவிதைகள். பணம், தேர்தல், தெருநாய், செவிலியர்கள் (அந்த மருத்துவமனை நர்ஸ்கள் பற்றி).. இப்படி எக்கச்சக்க கவிதைகள் எழுதி வைத்திருக்கிறார். எல்லாவற்றையும் பொறுமையாகப் படித்துக் காட்டுகிறார்.
''
நேரமாயிடுச்சு போலயே! இருட்டிப் போயிடுச்சே! நீ எப்படிம்மா போவ? உங்க வீடு எங்கே இருக்கு?'' - அக்கறையோடு கேட்கிறார். நமக்கோ அங்கிருந்து கிளம்பவே மனசில்லை.

''
சரிம்மா. பத்திரமா கிளம்பு.. இன்னிக்கு பொழுது எப்படி ஓடப் போகுதோ, பகவானே'னு நினைச்சிட்டிருந்தேன்.. பகவான்தான் உன்னை அனுப்பி இருக்கார்.. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு நீ வந்தது... இதிலேயே நான் தூங்கிப் போயிடுவென்!'' - என்றவரிடம் மீண்டும் அந்தக் குழந்தைச் சிரிப்பு!
தாளமுடியாத வலியுடன், அவரிடம் சொல்லிக்கொண்டு கிளம்பி, திரும்பித் திரும்பிப் பார்த்தபடியே அந்த வார்டை கடந்து படிகளில் இறங்கியபோது, கன்னங்களில் உருண்டது கண்ணீர்.
ச்சே...! என்ன வாழ்க்கை!

0 comments:

Post a Comment

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP