AdsforIndians

அம்மான்னா சும்மாவா

Tuesday, May 11, 2010

 
 
 
 படம் ஒன்றே போதுமே... பல்லாயிரம் சொல் வேண்டுமா...?
***************************************************************************

நான் எப்பவும் ஆணாதிக்கவாதின்னு வெளியா நல்லா நடிச்சு நல்ல பெயர் எடுத்தாலும் வீட்டிலே இருக்கும் போது அந்த ஆணாதீக்கம் அப்ப அப்ப நைசா எட்டி பார்ப்பதும் அடுத்த சில மணி நேரத்திலே நான் திடீர் திடீர் என திருந்துவதும் நடந்து கொண்டிருக்கின்றது ஒரு 13 வருஷமா.
அப்படித்தான் சென்ற டிசம்பர் மாதம் ஊரில் இருந்த போது நம்பி நட்ராஜின் லீலைகளை ரசித்து பார்த்து கொண்டிருந்தேன். அப்போது "என்ன ரசிப்பு வேண்டி கிடக்கு, இவனை ஒரு மணிநேரம் பார்த்துகிட்டா நான் சமைச்சு முடிச்சுடுவேன். ரொம்ப ஹாயா உட்காந்து ரசிச்சுகீட்டு இருக்கீங்களே" அப்படின்னு அபிஅம்மா கேட்டதும் நான் உடனடியாக சொன்ன பதில் "அய்யே நாங்க காஷ்டப்பட்டு சம்பாதிச்சு போடுவோம். நீங்க நகை "நட்டு"ன்னு வாங்கி போட்டுப்பீங்க. ஆனா நட்டுவை மாத்திரம் பார்த்துக்க முடியாதா, அடுத்த ஜென்மத்தில் நான் உனக்கு பொண்டாட்டியாவும் நீ எனக்கு புருஷனாகவுமிருந்துப்போம் டீல் ஓக்கேவா ஏன்னா ஏழேழு ஜென்மத்துக்கும் நாம தான் ஜோடி நம்பர் ஒன்" அப்படீன்னு கேட்க "அடடா ஆண்டவா! இதூவே ஏழாவது ஜென்மமா இருக்கனும்"ன்னு முனகி கிட்டே போயிட்டாங்க!
விடுவனா நான் உடனே போய் "அட நம்ம நட்டுவை நான் இன்னிக்கு முழுக்க பார்த்துகிட்டு அபியையும் பார்த்து கிட்டு சமையலையும் பார்த்து கிட்டா உன் தோல்விய ஒத்துகிறியா" ன்னு கேட்ட அடுத்த நிமிஷம் நட்டு என் கைக்கு வந்துட்டான். வந்து உட்காந்து என்னை திரும்பி பார்த்த போதே ஒரு நக்கலாக பார்த்தது வயிற்றில் புளி கரைத்தது. அபி கூட வெள்ளை கைக்குட்டை காட்டிடலாம்பா என சொன்னாள். விடுவனா நான் சவால்னு வந்துட்டா குதிச்சிடுவேன்ல.

நட்டுவை கையில இருந்து இறக்கி விட்டு விட்டு கிச்சன் பக்கம் போனேன். சரி வெங்காயம் கத்தி எல்லாம் எடுத்து கிட்டு இருக்கும் போதே நட்டு ஓடி போய் மாடி படியில் தாவி தாவி ஏறி கொண்டிருந்தான். நான் ஓடி போய் பிடித்து கொண்டு அந்த மாடி படியின் தற்காலிக மர கேட்டை மூடி பூட்டி விட்டு அவனை கொண்டு வந்து என் பக்கத்தில் வைத்து கொண்டு பாத்திரம் எல்லாம் எடுத்து கொண்டிருக்கும் போதே எனக்கு பின் பக்கம் ஏதோ சுடுவது போல இருந்து என்னன்னு திடீர்ன்னு திரும்பி பார்த்தா துப்பாக்கி மாதிரி இருந்த கேஸ்லைட்டர் வச்சி என்னை சுட்டு கிட்டு இருந்தான். பின் தொடை பழுத்து போச்சு. அந்த லைட்டர் ஸ்பார்க் வராது 1 இன்ச் அளவு நெருப்பு வரும். அய்யய்யோ ன்னுஅலறி அதை பிடுங்கி வைத்து விட்டு பாத்திரம் கழுகி கொண்டிருந்தேன். என்னவோ சர சரன்னு சத்தம் கேட்கவே நம்ம நட்டு சரசரன்னு கிச்சன் கதவை அறுத்து கொண்டிருந்தான். அய்யோ தேக்கு கதவுடா ன்னு கத்திகிட்டே "அய்யோ இந்த கத்தியை அவன் கைக்கு எட்டுவது போல யார் வைத்தது"ன்னு கத்தினேன். "நீங்க தான இப்ப வச்சீங்க"ன்னு ரூம் உள்ளே இருந்துசத்தம் வந்தது.
சரின்னு புளி கரைசலை கீழே வைத்து விட்டு அடுத்த வேளை பார்க்க ஆரம்பிச்ச போது பொலக்ன்னு ஒரு வித்யாசமான சத்தம். அத்தனை கரைசலையும் எடுத்து தலையில் கொட்டி கொண்டு நக்கிகிட்டு என்னை பார்த்து ஒரு சிரிப்பு வேற. எனக்கோ செம கடுப்ப்பு. ஓடி போய் ரூம் கதவை லைட்டா ஒரு உதை விட்டுட்டு (நம்ம வீட்டு கதவுல்ல அதான்) சரி சமையலுக்கு முன்ன நட்டுவை குளிப்பாட்டிடலாம்ன்னு பாத்ரூம் எடுத்து போனேன். அபி தான் நம்ம அஸிஸ்டண்ட்.

ஒரு வழியா புளிகரைசலை எல்லாம் கழுவி அவனுக்கு டிரஸ் எல்லாம் போட்டு முடித்து வந்தா கிச்சன் முழுக்க ஒரே புகை. ஏன்னா வெங்காயம் தக்காளி, கடுகு உ.பருப்பு எல்லாம் ஒரு இன்ச் அடிபிடித்து போய் எல்லாம் போச்சு. அந்த நாற்றம் கேட்டு வெளியே வந்தாங்க அபிஅம்மா.

திரும்ப டீலிங்ல கொஞ்சம் மாற்றம்! அதாவது சமையல் மாத்திரம் அவங்க. நட்டுவை பார்த்துப்பது நான். (ஏன்னா அவங்களுக்கு சாப்பாடு இல்லாம போயிடுமே அதனால் தான் போல இருக்கு) பின்ன ரொம்ப சந்தோஷமா நான் நட்டுவை மாடி கேட் திறந்து விட்டு ஏற சொன்னா அவன் என்னை விட 10 மடங்கு அதீக வேகத்தில் ஓட்டம். என்னால முடியலை. மூச்சு வாங்குது. சரி மாடி விளையாட்டு போதும்னு நினைச்சுகிட்டு அபிகிட்ட மெதுவா கேட்டேன்"அவன் எப்ப தூங்குவான்" அப்படின்னு. அப்பா அவனை வண்டில வச்சுகிட்டு வேகமா போனா அந்த எதிர் காத்துல நல்லா தூங்குவான் அப்படின்னு சொன்னா.
அட அபின்னா அபிதான்! என்னமா ஒரு பெரிய குடும்ப ரகசியத்தை சொல்லிட்டான்னு நினைச்சு சந்தோஷப்பட்டு வண்டிய எடுத்து அவனை வச்சிகிட்டு அவனுக்கு அப்ப முன்னாடி நிற்க தெரியாது. அதனால எனக்கும் அபிக்கும் எனக்கும் நடுவே உட்கார வச்சு போய் கிட்டே இருக்கேன். 1 நிமிஷம் 1 தடவை தூங்கிட்டானான்னு கேட்டுகிட்டே. இல்லப்பா சில சமயம் 1 மணி நேரம் ஆனா கூட தூங்க அடம் பிடிப்பான்"ன்னு சொன்ன போது பக்குன்னு ஆகிடுச்சு.
ஆனா அடுத்த 5 வது நிமிஷம் தூங்கிட்டான். அங்க தான் விதி விளையாடுச்சு. பெட்ரோல் தீர்ந்து வண்டி நின்னு போச்சு. அது வீட்டிலே இருந்து அரை கிலோ மீட்டர். அங்க எந்த பெட்ரோலுக்கும் வழி இல்லை. சரீன்னு ஒருத்தர் வீட்டிலே வண்டிய நிப்பாட்டி விட்டு அவனை தூக்கிகிட்டு நாக்கு தள்ள நடந்து வந்து சேரும் போது வீட்டை அடையும் போது நாக்கு தள்ளி போயிடுச்சு.

அப்பாடா வந்து சேர்ந்தாச்சு எப்படியும் 2 மணி நேரம் தூங்க மாட்டானா என நான் நினைத்து கொண்டிருக்கும் போதே "ஹவ் ஈஸ் தட்"ன்னு ஒரே கோரசா எங்க ஐபிஎல் திருவள்ளுவர் ராயல்ஸ் கத்தினதுல முழிச்சுகிட்டான். வேற வழி! கீழே இறக்கி விட்டேன். ஒரே ஓட்டம். மெதுவா அபி கிட்ட கேட்டேன். "வண்டில போனா தூங்குவான்ன்னு சொன்னியே"
அதுக்கு அவ "ஆமாம் சொன்னேன் நடந்துச்சா இல்லியா
"இப்ப முழிச்சுகிட்டானே"
"கிரிக்கெட் சத்தம் கேட்ட முழிச்சுப்பானா அப்படின்னு நீங்க கேட்கவே இல்லையே"இது அபி!

நம்பினா நம்புங்க மதியம் 12 வரை நான் ரொம்ப சோர்ந்து போயிட்டேன். அவன் கூட. காலை சாப்பாடும் சாப்பிடலை. அதுக்குள்ள வீட்டுக்காரம்மா வாசல்க்கு வந்து வாங்க சாப்பிடலாம்ன்னு சொன்ன வார்த்தை அமிர்தமா இருந்துச்சு. இவனை அந்த டீம்ல இருந்து பிச்சு எடுத்துகிட்டு வந்து வீட்டிலே விட்டா ஒரே கத்தல். பின்ன வெளியே போய் திருவள்ளுவர் ரைடர்ஸ் கிட்ட "டேய் போங்கடா நான் பேட் வாங்கி தரேன்"ன்னு கெஞ்சி அவனுங்க போன பின்ன அழகா சாப்பாடு பறிமாறும் வேலை வந்துச்சு. அபிஅம்மா சாப்பாடு மட்டும் தான் செய்வேன்னு சொன்னாங்களா? அப்ப நான் தான் பறிமாறும் வேளை!

பறிமாறி முடிச்சு சாப்பிட ஆரம்பிக்கும் போது தம்பி முகம் ஒரு மாதிரியா விளக்கென்னெய் குடிச்ச மாதிரி ஆச்சு. "ஏண்டி பாப்பா எப்படி போகுது அவன் முகம்!
"அப்பா மணி என்ன"

"இது என்ன கூத்து இதுக்கும் மணிக்கும் என்ன சம்மந்தம்"

"இல்லப்பா அம்மா 12 மணிக்கு சாப்பிட ஆரம்பிப்பாங்க. அப்போ பார்த்து தான் தம்பிக்கு ஆய் வரும். பாவம்ப்பா அம்மா அப்படியே போய் அவனை சுத்தம் பண்ணிட்டு அப்படியே சாப்பாடை கொட்டிடுவாங்க"
"என்னடா அபி! நீ எப்பவாது ஹெல்ப் பண்ணுவியா"

அதுக்கு அபிஅம்மா "அவ சின்ன குழந்தை தானே கொண்டு போய் பைப் கீழே நிக்க வச்சு பிரஷர் பைப்ல காரை கழுவுவது போல கழுவுவா! ஏன்னா அவளும் ஒரு வருங்கால அன்னைதானே"
"என்ன கொடுமை சாரி! குழந்தைன்னா ஆய் எல்லாம் போகுமா"
அப்போ வீட்டில் வேலை செய்யும் ஒரு அம்மா வந்தாங்க!

"தம்பி இந்த குழந்தை மட்டும் இல்லை அது என்னவோ நான் பார்த்த எல்லா குழந்தையுமே அம்மாவை சாப்பிட விட்டதில்லை போங்க"

மெதுவா சமாதானம் ஆகி அபிகிட்ட கேட்டேன்!

"அபி இப்படியெல்லாமா செய்வாங்க குழந்தைகள்னா! சரி அவனை தூங்க வைக்க அம்மா வண்டிய எடுத்துகிட்டு சுத்துமா"

"நோ நோ அப்பா இது அப்பா பார்முலா! அம்மா இங்கா கொடுத்து தூங்க வச்சிடுவாங்க! இல்லாட்டி ரெண்டு அடி போட்டா அழுதுகிட்டு தூங்குவான்"

"அந்த லைட்டர் கத்தி எல்லாம் எடுக்கிறானே"
"நீங்க தானே கத்தி லைட்டர் எல்லாம் அவன் கைக்கு எட்டும் படி வச்சீங்க அதல்லாம் அம்மாவுக்கு நல்லா தெரியும் எங்க வைப்பதுன்னு"

"சரி மாடி படி ஏறிகிட்டே இருக்கானே"

"அதுக்கு அம்மா அழுவது போல நடிப்பாங்க! அவன் பயந்து போய் அம்மா மடியிலே படுத்துப்பான். அந்த கேப்பிலே என்ன சமைக்க முடியுமோ ச்சமைப்பாங்க"

"இன்னும் எத்தனை ரகசியம் இருக்கு குழந்தை வளர்க்க?"

"நோ அப்பா எத்தனை ரகசியம் சொன்னாலும் உங்களால முடியாது. ஏன்னா அவன் தினுசு தினுசா அவன் பார்முலாவை மாத்துவான். அதை அம்மாவால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும்"

"அபி அப்ப நீ என்ன சொல்ல வரே"
"அப்பா ரெண்டு வார்த்தையில் சொல்லவா"

"அம்மான்னா சும்மாவா "
எல்லோருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்!

0 comments:

Post a Comment

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP